பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான விஷால், சினிமா விருதுகள் குறித்து பேசியுள்ள கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. தனது யூடியூப் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய அவர், சினிமா விருதுகள் மீதான தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். விருதளிக்கும் நடைமுறையையும், முடிவெடுக்கும் குழுவையும் அவர் அடிப்படையிலேயே கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய விருதுகள் உட்பட அனைத்தும் “Bullsh*t”
விஷால் தனது பேச்சில், எந்த ஒரு விருதிலும் தனக்கு நம்பிக்கை இல்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், தனது இந்தக் கருத்து தேசிய விருதுகளுக்கும் பொருந்தும் என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார். “எனக்கு விருதுகள் மீது நம்பிக்கை இல்லை. அது ஒரு பைத்தியக்காரத்தனம்” என்று குறிப்பிட்ட அவர், விருதளிக்கும் முறையைப் பற்றி இவ்வாறு விமர்சித்தார்: “7 கோடி மக்களுக்கும் சேர்த்து இவர்தான் சிறந்த நடிகர், இவர்தான் சிறந்த படம் என்று சொல்ல இவங்க என்ன மேதாவிகளா? நீங்கள் சர்வே எடுக்கணும், மக்கள் சர்வேதான் முக்கியம். நீங்க 8 பேர் முடிவு செய்வதுதான் Bullsh*t!” என்று கடுமையான வார்த்தைகளால் சாடினார்.
விருது கிடைத்தால் குப்பையில் அல்லது அன்னதானத்தில்!
விருதுகள் குறித்த தனது விமர்சனம், தனக்கு விருது கிடைக்காததால் அல்ல என்றும் விஷால் விளக்கம் அளித்துள்ளார். அவருக்கு ஒரு விருது கிடைத்தாலும், அதை எப்படி கையாளுவார் என்பதையும் அவர் வெளிப்படையாகக் கூறியிருப்பது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. “எனக்கு விருதுகள் தராததால் இதைச் சொல்லவில்லை. நான் விருது வாங்கினாலும், போகிற வழியில் குப்பைத்தொட்டியில் போட்டுவிடுவேன்,” என்று கூறிய அவர், ஒருவேளை அந்த விருது தங்கத்தால் செய்யப்பட்டிருந்தால் என்ன செய்வேன் என்பதையும் குறிப்பிட்டார். “அது தங்கமாக இருந்தால் அடகு வைத்து அந்தப் பணத்தில் அன்னதானம் செய்வேன்” என்று தனது சமூக அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்களின் அன்பை மட்டுமே உண்மையான அங்கீகாரமாகக் கருதுவதாகவும் அவர் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

