பழங்கால வேத மரபுகளையும் நவீன மனிதநேயத்தையும் இணைக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக, புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால் மற்றும் PETA இந்தியா அமைப்பு இணைந்து, ‘சங்கரா’ என்ற இயந்திர யானையை சென்னை ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமி வித்யா மந்திரிற்கு நன்க்கொடையாக வழங்கியுள்ளனர். ‘மல்மல்’ நிறுவனம் இந்த உன்னதமான முயற்சிக்கு நிதியுதவி அளித்துள்ளது.
இந்த இயந்திர யானையை கலைமாமணி விருது பெற்ற பிரபல நடிகை ரேவதி சங்கரன் இன்று முறைப்படி அறிமுகம் செய்து வைத்தார். இந்த விழாவில் ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் வி. ஷங்கர், ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியாவின் டாக்டர் சின்னி கிருஷ்ணா மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் ‘சங்கரா’ உற்சாகமாக வரவேற்கப்பட்டது.
நிஜ யானைகளுக்கு விடுதலை
யானைகள் மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் சமூக உணர்வுள்ள விலங்குகள். ஆனால், சடங்குகள் என்ற பெயரில் அவை கான்கிரீட் தளங்களில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, பல துன்பங்களுக்கு ஆளாகின்றன. கோவிலின் இந்த “முற்போக்கான முடிவு” நிஜ யானைகள் காடுகளில் தங்களது குடும்பங்களுடன் நிம்மதியாக வாழ உதவும். தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் மூன்றாவது இயந்திர யானை இதுவாகும்.
நடிகர் அர்ஜுன் ராம்பால் பேசுகையில், “நமது கோவில்கள் நம்பிக்கையின் சின்னம் மட்டுமல்ல, அவை கருணையின் இருப்பிடமும் கூட. இந்த இயந்திர யானை மூலம் புனிதச் சடங்குகளை கண்ணியத்துடனும், விலங்குகளுக்குத் துன்பம் தராமலும் நடத்த முடியும்,” என்றார்.
தொழில்நுட்பத்தின் அற்புதம்
இந்த ‘சங்கரா’ இயந்திர யானை 3 மீட்டர் உயரமும், 500 கிலோ எடையும் கொண்டது. ரப்பர், ஃபைபர் மற்றும் இரும்பு ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ள இது, ஐந்து மோட்டார்களின் உதவியுடன் இயங்குகிறது. இது நிஜ யானையைப் போலவே:
-
தலையை அசைக்கும், காதுகளை ஆட்டும்.
-
தும்ப்பிக்கையை உயர்த்தி பக்தர்களின் மீது தண்ணீரை பீய்ச்சியடிக்கும்.
-
இதன் மீது அமர்ந்து ஊர்வலம் செல்லும் வசதியும் உள்ளது.
தர்மமும் நவீனமும்
நடிகை ரேவதி சங்கரன் கூறுகையில், “காலம் மாறிவிட்டது, நமது மரபுகளும் அதற்கேற்ப மாற வேண்டும். எந்த உயிரினமும் சடங்குகளுக்காகத் துன்பப்படக்கூடாது,” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். காஞ்சி மஹாஸ்வாமி வித்யா மந்திர், தர்மத்தையும் நவீன கல்வியையும் இணைப்பதோடு மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறைக்கு உயிரிரக்கம் என்ற உன்னத பாடத்தையும் இதன் மூலம் கற்பிக்கிறது.