தமிழக அரசியலில் புதிய புயலாக கிளம்பியுள்ள தமிழக வெற்றி கழகம் (TVK) தலைவர் விஜய் அவர்களின் பிரச்சார அனுமதி தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு, சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ. குமரகுருபரன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் விஜய்யின் பிரச்சாரத்திற்கு திட்டமிட்டு முட்டுக்கட்டை போடப்படுவதாக தகவல்கள் பரவிய நிலையில், அது குறித்த உண்மைகளை அவர் தெளிவுபடுத்தினார். “48 மணி நேரத்திற்கு முன்னதாகவே ‘சுவிதா’ (Suvidha) இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதை விடுத்து, நாளைக்கு கூட்டம் நடத்துகிறோம் என்று பேப்பரில் கொடுத்துவிட்டு அனுமதி கேட்டால் வழங்க முடியாது,” என்று அவர் கறாராகத் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் முறை: அனைவருக்கும் சமமான விதிமுறை தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, எந்தவொரு அரசியல் கட்சியாக இருந்தாலும் பொதுக்கூட்டம் நடத்த சுவிதா இணையதளம் மூலமே அனுமதி பெற வேண்டும். இது குறித்து பேசிய அதிகாரி, “தலைவர்கள் யாராக இருந்தாலும், உரிய முறையில் விண்ணப்பம் செய்தால் மட்டுமே அனுமதி பரிசீலிக்கப்படும். கையால் எழுதி கடிதம் கொடுத்தால் அதை வாங்கி மட்டுமே வைத்துக்கொள்ள முடியும், அனுமதி வழங்க முடியாது,” என்றார்.
விஜய்யின் ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் இந்த செய்தி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமா துறையில் பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், அரசியலில் இறங்கும்போது தேர்தல் ஆணையத்தின் அடிப்படை விதிகளை முழுமையாகப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“இது ரசிகர் மன்ற ஷோ அல்ல” விஜய்யின் அரசியல் வருகையை விமர்சிப்பவர்கள், “இது தியேட்டர் உரிமையாளரை மிரட்டி டிக்கெட் முன்பதிவு செய்யும் ரசிகர் மன்றக் காட்சி அல்ல; இது ஜனநாயகம். இங்கே சட்ட விதிகள் தான் முக்கியம்,” என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டுள்ள விஜய்க்கு, இது ஒரு முக்கியமான நிர்வாகப் பாடமாகப் பார்க்கப்படுகிறது.
உரிய முறையில், போதிய கால அவகாசத்துடன் இணையதளம் வழியாக விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி வழங்கப்படும் என்றும், யாருடைய பிரச்சாரத்தையும் தடுக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் தேர்தல் அதிகாரி குமரகுருபரன் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.