வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதாரமும், கௌரவமும் அளிக்கும் நோக்கில், ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை தனது ‘ஜோய் இல்லங்கள்’ திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்ட 50 வீடுகளை இன்று வழங்கியது.
கம்பீரமான திறப்பு விழா
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் இந்தச் சாவிகள் வழங்கும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஜோய் ஆலுக்காஸ் குழுமத் தலைவர் திரு. ஜோய் ஆலுக்காஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ் சினிமாவின் ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு வீட்டின் சாவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் நடிகர் தியாகராஜன், நடிகை தேவயானி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், இயக்குனர் சரண், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
வீடற்றவர்களின் விடிவெள்ளி: ஜோய் இல்லங்கள்
சுமார் 500 சதுர அடி பரப்பளவில், அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த ஒவ்வொரு இல்லமும் வறுமை, இயற்கை சீற்றங்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட மிக எளிய குடும்பங்களுக்காகக் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
“ஒரு மனிதனுக்கு தங்குமிடம் என்பது வெறும் கூரை மட்டுமல்ல, அது அவனது பாதுகாப்பு மற்றும் கௌரவம்” என்பதை இந்தத் திட்டம் பறைசாற்றுகிறது.
இதுவரை கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 600-க்கும் மேற்பட்ட வீடுகளை இந்த அறக்கட்டளை கட்டி முடித்துள்ளது. தற்போது ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் தலா 50 வீடுகள் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
டாப் ஸ்டார் பிரசாந்தின் நெகிழ்ச்சி உரை
விழாவில் பேசிய நடிகர் பிரசாந்த், “இன்று ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் சென்னையில் கால்பதித்து 18-வது ஆண்டை எட்டுகிறது. இந்த இனிய நாளில், தமிழகம் முழுவதும் மிகவும் கஷ்டப்படும் 50 குடும்பங்களைத் தேடிப் பிடித்து, அவர்களுக்குத் தரமான வீடுகளை இலவசமாக வழங்கியிருப்பது மிகப் பெரிய விஷயம்,” என்றார்.
மேலும் அவர் பேசுகையில்:
” ‘எனக்கென்று ஒரு சொந்த வீடு இருக்கிறது’ என்று ஒவ்வொருவரும் கம்பீரமாகச் சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ் வழிவகை செய்திருக்கிறது. திரு. ஜோய் ஆலுக்காஸ் அவர்கள் ஒரு சிறந்த ரோல் மாடல். கடின உழைப்பால் உயர்ந்த அவர், இன்றும் எளியோர்க்கு உதவும் குணம் கொண்டவராக இருப்பது பாராட்டுக்குரியது. ஒரு கை கொடுப்பது மறு கைக்குத் தெரியாமல் பல மருத்துவ உதவிகளையும் இவர்கள் செய்து வருகிறார்கள்,” என மனதாரப் பாராட்டினார்.
தொடரும் சமூகப் பணிகள்
2009-ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை, வீடு வழங்குவது மட்டுமல்லாமல் சுகாதாரம், கல்வி, மற்றும் பெண்கள் மேம்பாடு ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, டயாலிசிஸ் கருவிகள் தானம், கோவிட் காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை மற்றும் பெண்களுக்குத் தொழில்முறை பயிற்சிகளை வழங்கி அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்து வருகிறது.
இந்த ‘ஜோய் ஹோம்ஸ்’ திட்டம், சமூகத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்கள் தங்களின் எதிர்காலத்தைப் பிரகாசமாக அமைத்துக் கொள்ள ஒரு வலுவான அடித்தளமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

