ஏற்கனவே ஆட்சிப் பொறுப்பில் இருந்த அனுபவமிக்க கட்சிகள் மீண்டும் அரியணை ஏறும் போது, அவர்களுக்கு நிர்வாகத்தின் நுணுக்கங்கள் அத்தனையும் அத்துப்படியாக இருக்கும். இதனால், எதிர்க்கட்சிகளோ அல்லது அரசியல் விமர்சகர்களோ புதிய அரசின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து விமர்சிப்பதற்குப் பெரிய அளவில் கால அவகாசம் எடுத்துக் கொள்வதில்லை. மறுபுறம், முற்றிலும் புதியதொரு கட்சி ஆட்சிக்கு வரும்போது, அரசாங்கத்தின் சிக்கலான கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளைப் புரிந்து கொள்வதற்காகக் குறைந்தபட்சம் ஆறு மாத கால அவகாசம் வழங்கப்படுவது மரபு. ஆனால், இந்த அவகாசம் என்பது நிர்வாகத்தை முழுமையாகக் கற்றுக்கொள்வதற்காகத் தானே தவிர, அன்றாட நிர்வாகத்தையே முடக்குவதற்காக அல்ல என்பதைப் புதிய ஆட்சியாளர்கள் உணர்வது அவசியம்.
தமிழகத்தில் நடைபெற்றுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு தற்போது கடுமையான பொது விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது. அமைச்சரவை சார்ந்த பூர்விக அனுபவம் இல்லாவிட்டாலும் கூட, ஒரு மாநிலத்தை வழிநடத்தும் போது நிர்வாகத் திறனை மிக வேகமாகக் கற்றுக்கொண்டு நிலைநிறுத்துவது ஒரு தலைவருக்கு மிக முக்கியம். ஆனால், தங்களுக்குக் கிடைத்துள்ள கால அவகாசத்தைக் காட்டி தட்டிக்கழிப்பதாகவே தற்போதைய அரசின் போக்கு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அரசியல் சேர்க்கையும் மக்களின் அன்றாடப் பாதிப்புகளும்
புதிய அரசு தற்போது சந்தித்து வரும் மிக முக்கியமான விமர்சனம் என்னவென்றால், அது நிர்வாகத்தை விட அரசியல் நகர்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்பதாகும். மாற்றுக்கட்சியினரைக் கவர்ந்திழுப்பது, தங்கள் கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்துவது போன்றவற்றில் காட்டும் அசாத்திய வேகத்தையும் சாகசத்தையும், மக்கள் நலன் சார்ந்த அன்றாட நிர்வாகத்தில் காட்டத் தவறிவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அரசியல் ரீதியான பலப்படுத்துதல் ஒரு கட்சியின் வளர்ச்சிக்குத் தேவை என்றாலும், அது மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.
இதன் நேரடித் தாக்கம் தற்போதைய பொதுப் பயன்பாட்டுத் துறைகளில் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, போக்குவரத்துத் துறையில் நிலவும் குளறுபடிகள் பொதுமக்களைப் பெரிதும் பாதித்துள்ளன. வார இறுதி நாட்களிலும், திருவிழாக் காலங்களிலும் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கும் சமயோசித திட்டமிடல் தற்போதைய நிர்வாகத்தில் முற்றிலுமாகப் புறந்தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, பல முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த பேருந்துகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, பல மாவட்டங்களில் ஆங்காங்கே தலைதூக்கும் அறிவிக்கப்படாத மின்வெட்டுப் பிரச்சினையும் புதிய அரசின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
அவசர மாற்றங்களும் திட்டமிடல் இல்லாத அணுகுமுறையும்
ஒரு புதிய அரசு பொறுப்பேற்கும்போது, முந்தைய அரசு பின்பற்றிய நடைமுறைகளை சில காலம் உற்று கவனித்து, அதன் பின்னரே தேவையான மாற்றங்களைச் சிறுகச் சிறுக அறிமுகப்படுத்த வேண்டும். அதுவே ஒரு சீரான நிர்வாகத்திற்கு வழிவகுக்கும். அதை விடுத்து, “ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக மாற்றிப் புதிய முத்திரை பதிக்க நினைப்பது, சீராக இயங்கிக் கொண்டிருக்கும் அரசு எந்திரத்தின் வேகத்தைத் தடைசெய்வதற்கே வழிவகுக்கும்.” இந்த அதிரடி அணுகுமுறை தற்போது அரசு அதிகாரிகளுக்குள்ளும், பொதுமக்கள் மத்தியிலும் தேவையற்ற குழப்பங்களையும் அவப்பெயரையும் மட்டுமே சம்பாதித்துக் கொடுத்துள்ளது.
“மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் மிக முக்கியப் பொறுப்பைத் தன் வசம் வைத்துள்ள ஒரு புதிய முதலமைச்சர், நிர்வாகத்தை எந்த அளவுக்கு உள்வாங்கியிருக்கிறார் என்பதை வெளி உலகிற்கு நிரூபிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்” என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள்.
ஆனால், கட்சித் தொடங்கியது முதல் இன்று வரை செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வரும் முதலமைச்சர் விஜய், ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னரும் அதே போக்கைத் தொடர்வது நிர்வாகப் பற்றாக்குறையாகவே பார்க்கப்படுகிறது. உயர்ந்த இடத்திற்கு வருவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளத் திறமை மிகவும் அவசியம்.
சமூக ஊடகப் போலிச் செய்திகளும் அதிகாரத்துவப் புறக்கணிப்பும்
கடந்த மூன்று வார கால ஆட்சியில், சமூக ஊடகங்களில் பரவி வரும் போலிச் செய்திகளைத் தடுப்பதிலும் புதிய அரசு போதிய கவனம் செலுத்தவில்லை. மாறாக, முந்தைய அரசின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குத் தங்களின் முத்திரையை (Sticker) ஒட்டும் பணிகளிலேயே ஆளுங்கட்சியினர் மும்முரமாக இருப்பதாகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திற்குள் இவ்வளவு போலிச் செய்திகள் பரவுவது, தமிழகத்தின் தனித்துவமான அரசியல் மற்றும் நிர்வாகச் சிறப்பைக் குலைப்பதாக உள்ளது.
அரசாங்கத்தின் தற்போதைய செயல்பாடுகள் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற ஒருவிதத் தற்பெருமையுடனேயே இருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, முதலமைச்சர் சமீபத்தில் பிரதமரைச் சந்திக்கச் சென்றதற்கு முன்பாக, மாநிலத்தின் மூத்த அரசு அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைகளை மேற் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அவ்வாறு அதிகாரிகளுடன் கலந்துரையாடி இருந்தால், மாநிலத்தின் நிதித் தேவைகள் மற்றும் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய வலுவான பட்டியலை மத்திய அரசிடம் சமர்ப்பித்திருக்க முடியும். எந்தவொரு முறையான முன் தயாரிப்பும் இல்லாமல் டெல்லிக்குச் சென்றது போன்ற ஒரு தோற்றத்தையே இந்தச் சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது. இனியாவது புதிய அரசு நிர்வாகத் திறனை மேம்படுத்திச் செயல்பட வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு.